செய்திகள்
திருமாவளவன்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு

Published On 2021-03-13 19:48 GMT   |   Update On 2021-03-13 19:48 GMT
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை விசிக கட்சி ஆதரிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பா.ஜ.க. அரசின் கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிடவேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிறோம்.

ஏற்கனவே, 14 பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டதால் வங்கிச் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 2 பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கப்போவதாக பட்ஜெட்டில் மோடி அரசு அறிவிப்புச் செய்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதோடு பொதுமக்களுக்கான வங்கிச் சேவையும் சீர்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இதைக்கண்டித்து பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்கும் நோக்கோடு எதிர்வரும் 15, 16 ஆகிய இரு தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் அமைப்புகள் அறிவிப்புச் செய்துள்ளன. இந்தப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News