செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல்

திண்டுக்கல் அருகே தனியார் நூற்பாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஊழியர்கள் ஓட்டம்

Published On 2021-03-09 04:40 GMT   |   Update On 2021-03-09 04:40 GMT
திண்டுக்கல் அருகே தனியார் நூற்பாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு பெட்ரோல் பங்க் அருகே தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு 3 ஷிப்டுகள் இயங்கி வரும் நிலையில் ஒரு ஷிப்டுக்கு சுமார் 2000 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். நேற்று இரவு பணியில் இருந்தவர்கள் இன்று காலையில் 7 மணிக்கு பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

காலை ஷிப்டுக்கு ஆட்கள் வந்து கொண்டிருந்தநிலையில் திடீரென அலுவலக அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் மில்லில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சற்றுநேரத்தில் வெடிக்கும் எனவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி சுகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து இறங்கினர்.

அவர்கள் வேலைக்கு வந்த பணியாட்களை வேறு இடத்தில் தங்க வைத்துவிட்டு மில்முழுவதும் சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் வந்த விபரம் தெரியவரவே வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பீதியுடன் வீட்டிற்கு திரும்பினர். தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உண்மையிலேயே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா? அல்லது யாரேனும் புரளியை கிளப்பிவிட்டனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News