செய்திகள்
விழுப்புரம் அருகே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சைக்கிள் பேரணி
கோலியனூர் வட்டார தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
விழுப்புரம்:
கோலியனூர் வட்டாரக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கோலியனூரில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கி, சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சாரண, சாரணிய இயக்கத்தினர் கலந்து கொண்டு, வாக்களிப்பது என் கடமை, என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் மாட்டிக்கொண்டு, கோலியனூர், தொடர்ந்தனூர், சாலைஅகரம், பனங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இதுகுறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் விழுப்புரம் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணிய மாவட்ட செயலாளர் மணி, பயிற்சி ஆணையர் கற்பகம், இணை மாவட்ட செயலர் ஜெரினா, ராஜா, தாஸ், அருளரசு, சுஜாதா, சிவஞானம், விழுப்புரம் அசோகா சாரணர் இயக்க ஓருங்கிணைப்பாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கோலியனூர் வட்டார தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.