திருப்பூரில் கலவை எந்திர லாரியில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி
திருப்பூர்:
திருப்பூர் முருகம்பாளையம் சூர்யா நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் கருணாநிதி (40) என்பவரும் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் மதியம் 2 பேரும் வேலை விஷயமாக எந்திரம் ஒன்று வாங்க திருப்பூருக்கு செல்ல முடிவு செய்தனர். அதற்காக மொபட்டில் இருவரும் திருப்பூருக்கு புறப்பட்டனர். மங்கலம் ரோடு தாடி காரமுக்கு அருகே மொபட்டில் வந்த போது பின்னால் கலவை எந்திரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது.
இந்தநிலையில் லாரி மொபட்டை முந்தி செல்ல முயன்ற போது மொபட்டின் பக்க வாட்டில் மோதியது. இதில் நிலை தடுமாறிய இருவரும் லாரியின் பின்பக்க டயருக்கு அடியில் சிக்கினர். லாரி இருவரது மீதும் ஏறி இறங்கியது.
இதில் பலத்த காயம் அடைந்த வேலுச்சாமியும், கருணாநிதியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனே மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரி டயரில் சிக்கி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கார்த்திகேயன் (45) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.