செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2021-03-07 23:30 GMT   |   Update On 2021-03-07 23:30 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியவர்களுக்கு போடப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியவர்களுக்கு போடப்பட்டு விட்டது. இதன் பின்னர் வருவாய்த்துறையினர், போலீசார் போன்றவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் 13 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்டம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 60 வயது வரை நீரிழிவு நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 27 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படடுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 27 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின்படி இந்த தனியார் மருத்துவமனைகளில் சேவை கட்டணமாக ரூ.100, தடுப்பூசியின் விலை ரூ.150 என மொத்தம் ரூ.250 தான் வசூலிக்க வேண்டும். இதனை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது.

அவ்வாறு கூடுதலாக தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல விரும்பாத பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து கொரோனா தடுப்பூசி இலவசமாக போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News