செய்திகள்
அழகு மீனா

ஆலங்குளம் அருகே பெண் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2021-03-07 16:54 GMT   |   Update On 2021-03-07 16:54 GMT
ஆலங்குளம் அருகே கொய்யா தோப்பில் பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த வடக்கு பூலாங்குளம் கிராமத்தில் உள்ள கொய்யா தோப்பில் நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த கொய்யா தோப்பில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த சாக்கு மூட்டையை போலீசார் அவிழ்த்து பார்த்தனர். அப்போது அந்த மூட்டையில், இறந்த பெண் உடல் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா, ஆலங்குளம் துணை சூப்பிரண்டு பொன்னி வளவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்த பெண், விருதுநகரைச் சேர்ந்த பெரியசாமி மனைவி ஜெனிபர் என்ற அழகு மீனா (வயது 51) என்பது தெரியவந்தது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அழகு மீனா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் வடக்கு பூலாங்குளத்தைச் சேர்ந்த ஒருவருடன் அழகு மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபர், அழகு மீனாவை அடைக்கலப்பட்டணத்தில் உள்ள விடுதியில் தங்க வைத்தார். இதற்கிடையே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அழகு மீனாவுக்கு காலில் புண் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவர், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகு மீனா திடீரென்று மர்மமான முறையில் இறந்தார். எனவே அவரது உடலை வடக்கு பூலாங்குளத்தைச் சேர்ந்த நபர் தனது உறவினரின் தோட்டத்தில் புதைப்பதற்காக, சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வடக்கு பூலாங்குளத்தைச் சேர்ந்த நபர், தோட்ட உரிமையாளர், விடுதி உரிமையாளர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே அழகு மீனா உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆலங்குளம் அருகே பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News