செய்திகள்
கொலை

மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்- தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது

Published On 2021-03-07 09:24 GMT   |   Update On 2021-03-07 09:24 GMT
மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக நினைத்து தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பஜனை மடத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 75). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ஜெயக்குமார் என்ற மகன் மட்டும் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தனது தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அய்யாத்துரை வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தியதில் ஜெயக்குமாருக்கும் அவரது தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து ஜெயக்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தனது தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் காயத்திரி என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது தந்தைக்கும் காயத்திரிக்கும் தவறான தொடர்பு இருக்கும் என சந்தேகப்பட்டு அவர்களிடம் தகராறு செய்து வந்தேன்.

இதனால் எனது மாமனார் வீட்டுக்கு சென்ற காயத்திரி திரும்பி வரவே இல்லை. கடந்த மாதம் எனது தாய் இறந்து விட்டார். அதில் பங்கேற்க காயத்திரி குடும்பத்தினர் வந்தனர். அப்போது எங்களை சேர்த்து வைக்கும்படி தெரிவித்தேன். ஆனால் அதற்கு எனது தந்தை மறுத்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் வரை நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என நினைத்தேன். இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த என் தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்றார்.

இதனையடுத்து போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News