செய்திகள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

தூத்துக்குடியில் தேர்தல் புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு

Published On 2021-03-07 02:11 GMT   |   Update On 2021-03-07 02:11 GMT
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்கான குழுக்களின் முதன்மை அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி:

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்கான குழுக்களின் முதன்மை அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் கடந்த கால தேர்தல்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் பதிவாகும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மக்களிடம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் எவ்வாறு வாக்காளிப்பது என்பது குறித்து மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும்.

தேர்தலின்போது கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முககவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். மேலும் தேர்தலுக்கு தேவையான கையுறைகள் மற்றும் தேவையான பொருட்களை பெற்று வாக்குச்சாவடிகளுக்கு முறையாக அனுப்பி வைக்க வேண்டும்.

செலவு கணக்கு கண்காணிப்பு குழுவினர் பிரசாரம் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் அதற்கான செலவுகள் குறித்து கணக்கீடு செய்ய வேண்டும். வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை மேற்கொள்வதற்கு என தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலமே செலவு செய்ய வேண்டும். செலவு செய்யப்படும் தொகைகள் குறித்து செலவு கணக்கு கண்காணிப்பு குழுவினருக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை உடனுக்குடன் அந்தந்த பகுதி பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல்களை தரவேண்டும். புகார்கள் குறித்து நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து கண்காணிப்புகுழு முதன்மை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாநகராட்சி ஆணையாளர் சரண்யாஅரி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தேர்தல் தாசில்தார் ரகு மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News