செய்திகள்
விபத்து

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

Published On 2021-03-05 18:26 GMT   |   Update On 2021-03-05 18:26 GMT
ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஒண்டிவடநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). அவருடைய மகன் வடிவேல் (40). விவசாயி. இவர்கள் 2 பேரும் விவசாயத்துக்கு தேவையான உரம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் செம்மடைப்பட்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் செம்மடைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வடிவேல் பரிதாபமாக இறந்தார். பலத்த காயங்களுடன் பழனிசாமி மீட்கப்பட்டார். அவருக்கு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூர் பெத்தயகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் விஜயகுமார் (18). கடந்த சில தினங்களாக இவர், பித்தளைப்பட்டியில் உள்ள அவருடைய சகோதரி பாண்டிமீனா வீட்டில் தங்கி இருந்தார். நேற்றுமுன்தினம் இவர், மோட்டார் சைக்கிளில் பித்தளைப்பட்டி-தர்மத்துப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். பித்தளைப்பட்டி ஓடைபாலம் அருகே அவர் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. 

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News