காதல் திருமணத்தால் தகராறு - மனைவியின் அண்ணனை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
கோவை:
மேட்டுப்பாளையம் எஸ்.எம் நகரைச் சேர்ந்தவர் சர்புதீன் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது அக்காவை சிறுமுகையை சேர்ந்த கார்த்தி என்கிற அப்துல்காதர் (41). தொழிலாளி. என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கார்த்தி, சர்புதீனுக்கு போன் செய்து திடீரென தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் நேற்று சர்புதீன் தனது நண்பர்களுடன் அம்மன் நகர் பகுதியில் நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தி திடீரென சர்புதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கார்த்தி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சர்புதீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.பின்னர் இதுகுறித்து சர்புதீன் சிறுமுகை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி என்கிற அப்துல் காதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.