திருப்பூர் நொய்யல் வீதியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.8 கோடி அரசு நிலம் மீட்பு
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி நொய்யல் வீதியில் 60 சென்ட் அளவுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் கடந்த 18 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்துள்ளார். இது தொடர்பான வழக்கு திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் முருகேசன் ஆஜராகி வாதாடினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவுப்படி வருவாய்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று நிலத்தை அளவீடு செய்தனர்.
இதில் 40 சென்ட் அளவுள்ள காலியிடம் இருந்தது. முதல் கட்டமாக அந்த இடத்தை சுற்றிலும் கல் நடப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
அதில் அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.8 கோடியாகும். மீதம் உள்ள 20 சென்ட் அளவுள்ள இடமும் விரைவில் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.