செய்திகள்
பெரியார் சிலைக்கு காவித்துண்டு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

ஒரத்தநாட்டில் பெரியார் சிலை மீது காவித்துண்டு போடப்பட்டதால் பரபரப்பு

Published On 2021-03-02 02:54 GMT   |   Update On 2021-03-02 02:54 GMT
ஒரத்தநாட்டில் பெரியார் சிலை மீது காவித்துண்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பைபாஸ் சாலையில், அரசு மகளிர் கல்லூரி அருகில் பெரியார் சிலை உள்ளது. நேற்று அதிகாலை இந்த சிலை மீது காவித்துண்டு போடப்பட்டு, சிலையின் தலையில் தொப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை நேரில் கண்ட திராவிடர் கழக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த காவித்துண்டையும், தலையில் இருந்த தொப்பியினையும் திராவிடர் கழக பிரமுகர்கள் அகற்றினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிந்து இருப்பது தங்களது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து திராவிடர் கழக ஒரத்தநாடு நகர தலைவர் ரவிச்சந்திரன் ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், போலீசார் பெரியார் சிலையின் அருகில், வணிக வளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News