செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் சிதறி கிடக்கும் பொருட்களை படத்தில் காணலாம்.

வலங்கைமானில் வீட்டின் பூட்டை உடைத்து டிவி- ரூ.43 ஆயிரம் கொள்ளை

Published On 2021-03-01 11:20 GMT   |   Update On 2021-03-01 11:20 GMT
வலங்கைமானில் வீட்டின் பூட்டை உடைத்து டி.வி. மற்றும் ரூ.43 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் பாபு (வயது32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது சொந்தமாக அறுவடை எந்திரத்தை வாங்கி, வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வி.ஆர்.எம். நகரில் ஒரு வீடு உள்ள நிலையில் தாயார், மனைவி மற்றும் குழந்தைகளுடன் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வி.ஆர்.எம். நகரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு அறுவடை எந்திரத்தை வாடகைக்கு விட்ட பகுதிக்கு சென்றார்.

நேற்று அதிகாலை அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் அறை கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி. மற்றும் பீரோவில் இருந்த ரூ.43 ஆயிரத்தை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டி.வி. மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருவாரூரில் இருந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. மோப்ப நாய் ராக்ஸி உதவியுடன் துப்பு துலக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுதொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.வி. மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News