செய்திகள்
கனிமொழி எம்பி

தி.மு.க. தெரிவிக்கும் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார்- கனிமொழி எம்பி பேச்சு

Published On 2021-02-28 10:58 GMT   |   Update On 2021-02-28 10:58 GMT
தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. தெரிவிக்கும் அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.



திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவி சுகத்திற்காக டெல்லியில் உள்ள பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் தமிழகத்தின் மொழி, உரிமை, பெருமை, மற்றும் அ.தி.மு.க. கட்சி, ஆகியவற்றை அடகு வைத்துள்ளார். அ.தி.மு.க. கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை வேண்டுமானாலும் நீக்க வேண்டுமானாலும் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும் தான் முடிவு செய்வார்கள்.

இந்த அரசு பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் பினாமி ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. தன்மானத்தை சுயமரியாதை இழந்த ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. எனவே இவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. இதனால் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 23 லட்சம் பேர் படித்து வேலை இல்லாமல் உள்ளனர்.

மேலும் பலர் வேலை இழந்துள்ளனர் பதவி சுகத்திற்காக மத்தியில் எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிக்கிற ஒரு கட்சியாக அ.தி.மு.க. அரசு உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களைக் கொண்டு வந்தார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்த அரசு ஆதரவு தெரிவித்தது.

தமிழகத்தில் எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அது தனக்கு என்ன லாபம் இருக்கிறது என்பதை எண்ணி தான் அந்தத் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க. அரசு 5 லட்சம் கோடிக்கு கடன் வாங்கி உள்ளார்கள். அதற்கு வட்டி மட்டும் ரூ.2 லட்சம் கோடி கட்ட வேண்டும். எதற்காக கடன் வாங்குகிறார்கள் பயனுள்ள திட்டத்திற்காக அல்ல. சாலை திட்டங்கள் அதற்காக அதிக அளவில் கடன் வாங்குகிறார்கள்.

ஆனால் எங்கும் சாலைகள் போடவில்லை எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக தரமற்ற சாலை இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. தெரிவிக்கும் அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி அதனை அறிவித்து வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது இந்த திட்டங்களை ஏன் கொண்டு வரவில்லை. இந்த அறிவிப்புகளை ஏன் அவர் அறிவிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் அவர் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல். அறிவித்த திட்டங்கள் எதையும் அவரால் செயல்படுத்த முடியாது. அறிவிப்புகள் மட்டுமே அவர் வெளியிடுவார் அடுத்ததாக அறிவித்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.

ஆனால் எந்த ஒரு திட்டமும் நிறைவேறாது. அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு அடிக்கல் நாட்டும் நாயகன் என பெயர் வைக்கலாம். அவருடைய ஆட்சியில் எல்லாம் அடிக்கல் நாட்டுவது மட்டும் தான் இருந்தது.

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இந்த ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை . இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்து அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News