செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால் தொகுதிகளை குறைத்துக்கொண்டோம் -அன்புமணி

Published On 2021-02-27 14:03 GMT   |   Update On 2021-02-27 14:03 GMT
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது முடிவு செய்யப்படவில்லை. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

பா.ம.க.வின் மிக முக்கிய கோரிக்கையான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று, மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, மசோதா நிறைவேற்றப்பட்டதால் பாமக திருப்தி அடைந்துள்ளது. அதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் இழுபறி இல்லாமல் விரைவாக முடிந்துள்ளது.

தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 40 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால், தொகுதிகளை குறைத்து பெற்றிருப்பதாக கூறினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

வன்னியர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில்  சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்’ என ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
Tags:    

Similar News