செய்திகள்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்:
விருதுநகர் மாவட்டம் நாணாபுரத்தை அடுத்த பூச்சகாபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் பிச்சைக்கனி (வயது 30). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. மாரியப்பன் திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த தோப்புத்தோட்டம் பகுதியில் தங்கி, 15 வேலம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பல்பொருள் அங்காடியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பிச்சைக்கனி மனஉளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று மதியம் உணவு இடைவேளைக்கு சென்று திரும்பிய அவர் தலைவலிப்பதாக கூறி முதல்தளத்திற்கு ஓய்வு எடுக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது பிச்சைக்கனி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பிச்சைக்கனி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.