செய்திகள்
கொலை

தாராபுரம் அருகே கள்ளக்காதலை கண்டித்த வியாபாரியை கொன்ற மனைவி

Published On 2021-02-27 07:13 GMT   |   Update On 2021-02-27 07:13 GMT
தாராபுரம் அருகே கள்ளக்காதலை கண்டித்த வியாபாரியை கொடூரமாக கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கீரனூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 35). இவரது மனைவி தேவி. இவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே பழவியாபாரம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி முதல் தண்டபாணியை காணவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து கீரனூர் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

இதனிடையே தாராபுரம் -கோவை சாலை இடையே உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் ரத்தம் படிந்த நிலையில் சாக்கு மூட்டை கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கிணற்றுக்குள் கிடந்த சாக்கு மூட்டையை வெளியே எடுத்து பார்த்த போது உள்ளே கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் இருந்தது. இதனால் அவரை கொன்ற மர்மநபர்கள் கை-கால்களை கட்டியதுடன் சாக்கு மூட்டையில் கல்லை கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யாரென்று விசாரணை நடத்திய போது மாயமான தண்டபாணி என்பது தெரியவந்தது.

அவரை கொலை செய்து கிணற்றுக்குள் வீசிய மர்மநபர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? என்று தாராபுரம் மற்றும் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தண்டபாணியின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, கள்ளக்காதல் விவகாரத்தில் தேவி, கணவன் தண்டபாணியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தேவிக்கு ஏற்கனவே முனியப்பன் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் 2-வதாக தண்டபாணியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இதனிடையே தாராபுரம் கொளிஞ்சிவாடி பகுதியை சேர்ந்த அபிஷேக்(வயது 19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

கடந்த 14-ந்தேதி கீரனூரில் உள்ள தேவியின் வீட்டிற்கு அபிஷேக் சென்றார். அப்போது தண்டபாணிக்கும் அபிஷேக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபிஷேக்கும் மனைவி தேவியும் தண்டபாணியை தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் தண்டபாணியின் கை-கால்களை கட்டி சாக்கு மூட்டையில் கட்டி தாராபுரம் சாலையில் உள்ள தோட்டத்து கிணற்றுக்குள் கல்லை கட்டி வீசி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். போலீசார் விசாரணையில் அபிஷேக்கும், தேவியும் சிக்கிக் கொண்டனர். 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News