செய்திகள்
கைது

எங்களை போலீசில் பிடித்து கொடுத்தால்... பொதுமக்களை மிரட்டும் திருடர்கள்

Published On 2021-02-27 04:45 GMT   |   Update On 2021-02-28 07:46 GMT
பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி மாரியம்மன் கோவிலில் காவலாளியை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சந்தை பகுதியில் சேற்றுக்கால் மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், விசே‌ஷ தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் இந்த அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த 3 பேர் கும்பல் அங்கு காவலுக்கு இருந்த கணேசன் (வயது 70) என்பவரை தாக்கி அறைக்குள் வைத்து பூட்டினர். பின்னர் கோவிலுக்குள் சென்று ஒரு கிலோ அளவிலான வெள்ளி கவசம், அரை பவுன் பொட்டு தாலியை திருடி விட்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அறைக்குள் இருந்த கணேசன் நேற்று காலை வெளியில் வந்து முக்கிய நபர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே தகவல் அறிந்த டி.எஸ்.பி. ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், குற்றப்பிரிவு எஸ்.ஐ. சகாயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கீரம்பூரில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் 3 பேர் பணத்தை குவியலாக கொட்டி அதனை பங்கு வைப்பதற்காக பிரித்து கொண்டிருந்தனர்.

இதனை அந்த வழியாக சென்ற மக்கள் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது தாங்கள் மதுரையை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள், எங்களை போலீசில் பிடித்து கொடுத்தால் சும்மாவிட மாட்டோம் என மிரட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் அவர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜூ (வயது24), முருக சூர்யா (22), கருப்பசாமி (23) என்பதும் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதும் அவர்கள் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News