செய்திகள்
முக ஸ்டாலின்

போக்குவரத்து ஊழியர்களை முதல்-அமைச்சர் உடனடியாக அழைத்து பேசுவாரா?- முக ஸ்டாலின் கேள்வி

Published On 2021-02-26 01:18 GMT   |   Update On 2021-02-26 01:18 GMT
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்ந்து இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ள முக ஸ்டாலின், போக்குவரத்து கழக ஊழியர்களை முதல்-அமைச்சர் அழைத்துப்பேச முன் வருவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. சென்ற முறை 58 வயதில் இருந்து 59 வயதாக மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோதே 60 வயதாக உயர்த்தியிருக்க வேண்டும்.

தற்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் அதை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான பலன்களை எதிர்பார்த்து தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிடும் முதல்- அமைச்சர் பழனிசாமி, இப்போதுதான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருக்கிறார்.

அதே நேரத்தில், படித்து கல்வித்தகுதி பெற்று, தமது எதிர்காலத்தை நினைத்து, மிகுந்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்து, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு எந்த வழியிலும் பறிபோகாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்து செயல்படுத்துவதும் அவசியம்.

ஆனால், போராடும் போக்குவரத்து ஊழியர்களை அழைத்து பேசுவதற்கு கூட முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு மனமில்லை. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உரிய பயன்களை அளிக்காமல் ஒருபுறம் நிந்தித்து, போராடும் அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தி, வழிமறித்து, இரவோடு இரவாக கைது செய்து, அடக்கு முறைகளை கையாண்ட அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மை கொண்ட முதல்-அமைச்சர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இப்போதாவது போக்குவரத்து ஊழியர்களை முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வருவாரா?

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News