செய்திகள்
சங்கராபுரம் அருகே பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி பலி
சங்கராபுரம் அருகே 7-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள கல்லேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் சவுந்தரராஜன்(வயது 16). இவன் அழகாபுரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சவுந்தரராஜன் நேற்று காலை அவரது தாயார் பச்சையம்மாளிடம் காலைக்கடன் கழிக்க மணிமுக்தாறு பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றான்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவனது தாயார் பச்சையம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிமுக்தாற்றுக்கு சென்று மகனை தேடினார். அப்போது கரையோரம் சவுந்தரராஜனின் சட்டை மட்டும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆற்றில் இறங்கி தேடியபோது சவுந்தர்ராஜன் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தான்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார், சவுந்தரராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.