செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர்

ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்வு

Published On 2021-02-25 03:36 GMT   |   Update On 2021-02-25 05:24 GMT
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்ந்துள்ளது.
சென்னை:

பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக உயர்ந்தபடியே இருக்கிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. அதேபோல் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சமையல் கியாஸ் விலை கடந்த 4-ந்தேதி சிலிண்டருக்கு ரூ.25 உயர்ந்தது. அதன்பின் கடந்த 15-ந்தேதி ரூ.50 உயர்ந்து சிலிண்டர் ரூ.785-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிலிண்டருக்கு ஒரே நேரத்தில் ரூ.50 உயர்ந்தது கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் இந்த மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து இருக்கிறது. இன்று சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.810-க்கு விற்கிறது.

ஒரே மாதத்தில் சிலிண்டருக்கு ரூ.100 உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விலை உயர்ந்த அதிர்ச்சியில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இன்று விலை உயர்வு மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.734 ஆக இருந்தது. அடுத்த மாதத்தில் ரூ.881 ஆக விலை உயர்ந்தது.

அதன்பிறகு சிலிண்டர் விலை குறைந்து மே மாதத்தில் அந்த ஆண்டின் குறைந்தபட்ச விலையாக ஒரு சிலிண்டர் ரூ.569.50 ஆக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் ரூ.610 ஆகவும், டிசம்பர் 1-ந்தேதி ரூ.660 ஆகவும் சமையல் கியாஸ் சிலிண்டர் விற்கப்பட்டது. டிசம்பர் 15-ந்தேதி ஒரு சிலிண்டர் விலை ரூ.710 ஆக நிர்ணயம் செய்து விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News