செய்திகள்
அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

அனைத்து பேருந்துகளும் நாளை இயங்கும் - அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்

Published On 2021-02-24 17:06 GMT   |   Update On 2021-02-24 17:06 GMT
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறி உள்ளனர்.  

போக்குவரத்து ஊழியர்கள் வியாழக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களும் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.  ஆனால், திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.  

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்க்குப் பேட்டி அளித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியதாவது:  போக்குவரத்து தொழிலாளர்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும்.  நாளை அனைத்து பேருந்துகளும் இயங்கும்.  மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வு கால பயன்கள் வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்” எனத்தெரிவித்தார். 

Tags:    

Similar News