செய்திகள்
விபத்து பலி

திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

Published On 2021-02-24 11:52 GMT   |   Update On 2021-02-24 11:52 GMT
திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த விடையூர் நெமிலியகரம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). நேற்று முன்தினம் அஜித்குமார் தனது மனைவி சரோஜினி (வயது 26) யுடன் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜா அடுத்த ஆரப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர்கள் திருவள்ளூரை அடுத்த கண்ணூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே கண்ணூர் கிராமத்தை சேர்ந்த குப்புராஜன் (வயது 29) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அஜித்குமார், அவரது மனைவி சரோஜினி மற்றும் குப்புராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரோஜினி பரிதாபமாக இறந்து போனார். இதில் காயம் அடைந்த அஜித்குமார், குப்பு ராஜன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த மப்பேடு கே.கே. நகரை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 65). நேற்று முன்தினம் பொன்னம்மாள் அந்த வழியாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பேரம்பாக்கத்தில் இருந்து உளுந்தை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக பொன்னம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மப்பேடு பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பொன்னம்மாள் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News