திருமங்கலம் அருகே திருமண மண்டபத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எம்.மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்காக மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ஒலிபெருக்கி உரிமையாளர் செல்வம் என்பவர் ஒலி பெருக்கிகளை கட்டியிருந்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்து மண்டபத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி உபகரணமான 3ஆம்ப்ளி பயர்களை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒலிபெருக்கி உரிமையாளர் செல்வம் ஒலிபெருக்கி உபகரணங்களை மர்மநபர் தூக்கிச் செல்வதை கண்டு கூச்சலிட்டபடி அவரை பிடிக்க விரட்டினார்.
அவர் வருவதை கண்ட மர்ம நபர் ஆம்ப்ளி பயர்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றுள்ளான். ஆனால் அவனை ஒலிபெருக்கி உரிமையாளர் செல்வம் துரத்திப் பிடித்து அக்கம் பக்கத்தினரை அழைக்கவே கிராம மக்கள் அனைவரும் ஓடி வந்து திருடனைகையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த நபரை கிராமத்து மந்தையில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் கொள்ளையனை பிடித்து விசாரித்தபோது டி.கல்லுப்பட்டி அருகே வையூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது31) என்பதும் ஒலி பெருக்கி ஆப்பரேட்டர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது
இதனையடுத்து போலீசார் திருடனை மீட்டு அவனுடைய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத் திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கி உபகரணங்களை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் மீனாட்சிபுரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.