செய்திகள்
மதுரவாயல் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரவாயல் அருகே தாய், தந்தை பிரிந்து சென்றதால் மனமுடைந்த கல்லூரி மாணவர், அவரது தாத்தா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், அழகம்மாள் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 68). இவரது பேரன் அவினாஷ் (19). தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவினாசின் தந்தை பாபு, தாய் உஷா ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் தனது தாத்தா வீட்டில் அபினாஷ் வளர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தாய், தந்தை பிரிந்து சென்றதால் அவினாஷ் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அவினாஷ் நேற்று முன்தினம் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த ராமலிங்கம் அறைக்குள் சென்று பார்த்தபோது, அவினாஷ் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தாய், தந்தை பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.