செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

சாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்

Published On 2021-02-19 03:05 GMT   |   Update On 2021-02-19 03:05 GMT
சாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீஸ் விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். அங்கு தாக்கப்பட்டதில் இருவரும் இறந்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ்காரர்கள் 10 பேரும் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்துவிட்டார். மீதமுள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தும், அவற்றை கோர்ட்டு நிராகரித்து தள்ளுபடி செய்தது. இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தாண்டவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடந்தது. பின்னர் இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News