செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.15,700 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு வட்ட தலைவர் அப்பாசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபாபு முன்னிலை வகித்தார்.
இதில் பொதுச்செயலாளர் தமிழ்செல்வன், செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.15,700 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்கவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ரத்தத்தில் கையெழுத்திடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிராம உதவியாளர் சங்க வட்டத் தலைவர் ஹாஜா நஜ்முதீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார். வட்டச்செயலாளர் இளையராஜா, பொருளாளர் ரமேஷ் குமார், துணைத்தலைவர் குமார், துணைச் செயலாளர் கதிரவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளர்மதி மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.