இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்வார்கள்- எல் முருகன்
கோவை, பிப்.16-
தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை சின்னியம் பாளையத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாநில பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் மோடி பிரசாரம்
குறிப்பிட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயரிடப்பட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். தற்போது தேவேந்திர குல மக்களின் அங்கீகாரம் மீட்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி கோவைக்கு வருகிற 25-ந் தேதி வருகை தருகிறார். இங்கு பிரசார பொதுக்கூட்டத்திலும், அரசு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
சேலத்தில் 21-ந் தேதி நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். இரட்டை இலக்கத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபையில் இருப்பார்கள்.
எல்லா அரசியல் கட்சிகளும் வேல் வைத்து பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு நாங்கள் தான் காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்குள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.