செய்திகள்
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 34.24 ஏக்கரில் அமைந்துள்ள மில்லை படத்தில் காணலாம்.

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 34.24 ஏக்கர் மில் அரசுடைமை

Published On 2021-02-11 02:02 GMT   |   Update On 2021-02-11 02:02 GMT
திருவாரூர் அருகே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 34.24 ஏக்கரில் அமைந்துள்ள மில் அரசுடைமையாக்கப்பட்டது.
திருவாரூர்:

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சுதாகரன் தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவர்களது சொத்துகளை தமிழக அரசு அரசுடைமையாக்கி வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டன.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் பங்குதாரர்களான சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் பலருக்கு சொந்தமான சொத்து வண்டாம்பாளை கிராமம், கீழகாவாதுகுடி கிராமம் ஆகியவற்றில் உள்ள 34 ஏக்கர் 24 சென்ட்(14 லட்சத்து 91 ஆயிரத்து 494 சதுர அடி) மற்றும் வண்டாம்பாளை தொழிலாளர் குடியிருப்பு 5 தரை தளம், தரை தளத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு கட்டிடம், முதல் தளத்தில் உள்ள விருந்தினர் கட்டிடம், டுவின் ஹவுஸ் மற்றும் மேலாண்மை இயக்குனர் பங்களா ஆகிய சொத்துகள் தமிழ்நாடு அரசால் நேற்று அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

மேற்படி சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய்(வாடகை, நிலுவை வாடகை உள்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மில் பயன்பாடற்ற நிலையில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News