செய்திகள்
கேஎஸ் அழகிரி

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்- கேஎஸ் அழகிரி அறிக்கை

Published On 2021-02-10 07:46 GMT   |   Update On 2021-02-10 07:46 GMT
கச்சா எண்ணை விலை வீழ்ச்சிக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை வதைக்கும் பல்வேறு நட வடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அதற்கு மாறாக, மத்திய பா.ஜ.க. அரசு 11 முறைகலால் வரியை உயர்த்தி ரூபாய் 20 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தி, வரலாறு காணாத பகற் கொள்ளையை மோடி அரசு நடத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில் கொடூரமான போக்கை மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் 2021 பிப்ரவரியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 50 டாலராக குறைந்தது.  ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 31 ஆகவும், கலால் வரி ரூபாய் 60 ஆகவும் உயர்ந்தது. இதனால், பெட்ரோல் விற்பனை விலை ஒரு லிட்டர் இன்று 91 ரூபாயை எட்டிவிட்டது. இதன்மூலம் அடக்க விலையில் கலால் வரி 200 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைவிட அப்பட்டமான பகற்கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்தாலோ, அல்லது 2014 நிலவரப்படி கலால் வரியை விதித்தாலோ பெட்ரோல் விலை கடுமையாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

2021 பிப்ரவரி நிலவரப்படி பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 31. ஆனால், தற்போது விற்பனை விலை ரூபாய் 91 ஆக இருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் இருந்த கலால் வரியை விதித்தால் பெட்ரோல் விலை ரூபாய் 44 விலைக்கு விற்க முடியும். அதேபோல, கலால் வரிக்கு மாற்றாக 28 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால் 38 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்க முடியும். ஆனால், இதை எதையுமே செய்வதற்கு மோடி அரசு தயாராக இல்லை.

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார வீழ்ச்சியினாலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிற மக்கள் மீது கலால் வரியை உயர்த்திய நடவடிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், கலால் வரி விதிப்பதை தவிர்க்க வேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய மக்கள் விரோத போக்கு தொடருமேயானால், பிரதமர் மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News