செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

சசிகலாவை ஊழல்வாதி என அமைச்சர்கள் கூறுவது வேடிக்கை- உதயநிதி ஸ்டாலின்

Published On 2021-02-09 08:58 GMT   |   Update On 2021-02-09 08:58 GMT
சசிகலாவை ஊழல்வாதி என்று அமைச்சர்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை. அதனால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி நிலுவையை வழங்க மறுத்து வருகின்றனர். ஆனால் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

பா.ஜ.க.வால் தனித்து போட்டியிட முடியாது என்பதால் அ.தி.மு.க.வை கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் இறங்கியுள்ளனர் இந்த 2 கட்சிகளுக்குமே வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

மோடியின் சொல் பேச்சை கேட்கும் பிள்ளைகள் போல ஓ.பி.எஸ், இ.பி.எஸ். செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் சென்னையில் பல கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது போன்ற ஊழல்வாதிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

சசிகலாவை ஊழல்வாதி என்பதால் அவரை கட்சியில் சேர்க்க முடியாது என்று அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர். இந்த ஊழல் நடந்தது அ.தி.மு.க. ஆட்சியில்தான். அவ்வாறு இருக்கும்போது சசிகலாவை ஊழல்வாதி என்று அமைச்சர்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என்பது தி.மு.க.வின் கொள்கையாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. நீட் தேர்வு காரணமாக அனிதா உள்பட 14 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் சாவுக்கு தமிழக அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்னும் 2 அமாவாசைகள் முடிந்தால் அடுத்து தி.மு.க. ஆட்சிதான். இதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News