செய்திகள்
ஜிகே வாசன்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்- ஜிகே வாசன் நம்பிக்கை

Published On 2021-02-07 19:36 GMT   |   Update On 2021-02-07 19:36 GMT
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கோவை தங்கம், பொது செயலாளர் விடியல் சேகர், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மாணவரணி மாநில தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தை தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு மாணவர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்கு தேவையான இலவச இணையதள வசதிகளும் அளித்துள்ளது.

த.மா.கா. சார்பில் மண்டலம் வாரியாக, மாநில நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் வரும் சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. வேட்பாளர்கள், அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தொடரும்.

கூட்டுறவு வங்கியில் உள்ள விவசாய கடன்களை அ.தி.மு.க. அரசு தள்ளுபடி செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News