செய்திகள்
கார் டிரைவரிடம் செல்போனை திருடிய தொழிலாளி கைது
விழுப்புரம் அருகே கார் டிரைவரிடம் செல்போனை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
தென்காசி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 41), கார் டிரைவர். இவர் ராஜபாளையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக அரசு பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வரும்போது யாரோ ஒருவர், பாலமுருகனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார்.
உடனே அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாலமுருகன் மடக்கிப்பிடித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்குப்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரவி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.