செய்திகள்
ஜெயலலிதா நினைவு இல்லம்

நினைவு இல்லத்தில் இருக்கும் பொருட்கள் எவை?

Published On 2021-01-29 02:26 GMT   |   Update On 2021-01-29 02:26 GMT
அதிமுக தொண்டர்களின் விருப்பப்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 கோடியாகும்.
சென்னை:

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் 10 கிரவுண்டு 322 சதுரடி பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. 40 ஆண்டுகள் ஜெயலலிதா இந்த வீட்டில்தான் வாழ்ந்து மறைந்தார்.

கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி இரவு 10 மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அழைத்து செல்லப்பட்ட அவர், 75 நாள் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் மறுநாள் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, சில சடங்குகள் நடத்தப்பட்ட பிறகு ராஜாஜி இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அன்று மாலையே மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 கோடியாகும்.

வேதா நிலையத்திற்குள் நுழைந்தவுடன் இடது புறம் விநாயகர் கோவில் உள்ளது. தேர்தல் பிரசாரம், கோடநாடு செல்லும்போதெல்லாம் விநாயகரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் பெரிய ஹால் உள்ளது. அதன் அருகே சிறிய ஆலோசனைக் கூடம் இருக்கிறது. அதனையொட்டி, அமைச்சர்கள், அதிகாரிகள் அமரும் அறை இருக்கிறது.

மாடிப் பகுதிக்கு ஏறிச் செல்லும் இடத்தில், மற்றொரு கூட்ட அறை உள்ளது. அதன் அருகே, ஜெயலலிதாவை பார்ப்பதற்காக வருபவர்கள் காத்திருக்கும் அறை உள்ளது. ஆங்காங்கே அண்ணா, எம்.ஜி.ஆர். புகைப்படங்கள் வைக்கப் பட்டுள்ளது. முதல் தளத்திற்கு ஏறிய உடன் நூலகம் உள்ளது. நூலகத்திற்கு அருகே சிறிய ஆலோசனை கூட்ட அறை உள்ளது. அதைத் தாண்டிய உடன் ஜெயலலிதாவின் அறை இருக்கிறது. அதன் அருகே அவரது தோழி சசிகலாவுக்கு ஒரு அறை உள்ளது.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, முதல் தளத்தில் கட்சிப் பணிகளை மேற்கொள்வார். 2-வது தளத்தில் முதல்-அமைச்சருக்கான முகாம் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

ஜெயலலிதா நினைவு இல்லத்தில், மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளன. அதில், 8,376 புத்தகங்கள், 394 நினைவு பொருட்கள், 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகள், 601 கிலோ 424 கிராம் கொண்ட 867 வெள்ளிப் பொருட்கள், 11 டி.வி., 10 பிரிட்ஜ், 38 ஏ.சி. எந்திரங்கள், 556 மேஜை, நாற்காலி போன்ற தளவாடங்கள், 6,514 சமையல் பொருட்கள், 12 சமையல் ரேக்குகள் மற்றும் தளவாடங்கள், 1,055 காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள்,

15 பூஜை உபகரணங்கள், 10 ஆயிரத்து 438 உடைகள், துண்டு, படுக்கை விரிப்பு, தலையணை உறை, செருப்புகள். 29 போன்கள் மற்றும் செல்போன்கள், 221 சமையலறை எலக்ட்ரானிக் சாதனங்கள், 251 எலக்ட்ரானிக் பொருட்கள், 653 கோர்ட்டு ஆவணம், உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள், 65 சூட்கேஸ், 108 அழகுசாதன பொருட்கள், 6 கடிகாரங்கள் அடங்கும்.

இவை அனைத்தும் தற்போது மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகே எவை எல்லாம் காட்சிப்படுத்தப்படும் என்பது தெரியவரும்.
Tags:    

Similar News