செய்திகள்
தடையை மீறி ஊர்வலம் நடத்திய 265 பேர் மீது வழக்கு
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி ஊர்வலம் நடத்திய 265 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக குடியரசு தினமான நேற்று முன்தினம், டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனாலும் தடையை மீறி இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த ஜோசப் நெல்சன், சுரேஷ் மற்றும் விவசாய சங்க நிர்வாகி அயிலை சிவசூரியன் உள்ளிட்ட 175 பேர் மீது திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். இதுபோல டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட தலைவர் இமாம் ஹசான் உள்ளிட்ட 90 பேர் மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.