ஆனைமலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது
பொள்ளாச்சி:
ஆனைமலையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். சிறுமிக்கு ஆனைமலையை சேர்ந்த 3 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் போனில் பேசிவந்ததாக கூறப்ப டுகிறது. இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து, சிறுமியின் தந்தை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை தேடிவந்தனர். கடந்த 19-ந்தேதி மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி தன்னை ஆனைமலையை சேர்ந்த 3 பேர் தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் ஆனைமலையை சேர்ந்த ஹரீஸ்(23), சூர்யா(23), ரஞ்சித்(23) ஆகிய 3 வாலிபர்களை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாதவர்கள் என்று கூறப்படுகிறது.