செய்திகள்
நச்சலூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
நச்சலூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நச்சலூர்:
நச்சலூர் அருகே உள்ள பொய்யாமணி கோரைப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). இவர் நேற்று முன்தினம் ஒரு டிராக்டரில் நெல் மூட்டைகளை கோரைப்பட்டியில் இருந்து ஏற்றிக்கொண்டு தளிஞ்சிக்கு சென்றுள்ளார். அப்போது நச்சலூர்-தளிஞ்சி சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பும் போது டிராக்டர் சாலை ஓரத்தில் நெல் மூட்டைகளுடன் கவிழ்ந்தது. இதில் விஜயகுமார் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விஜயகுமார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து விஜயகுமார் அண்ணன் செந்தில் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.