செய்திகள்
திருவள்ளூர் அருகே தொழிலாளி தற்கொலை
திருவள்ளூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மடத்துக்குப்பம் கிராமம் ஏகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், அனிதா, பச்சையம்மாள் என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக துரைராஜ் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துரைராஜின் மனைவி மற்றும் மகள்கள் காஞ்சீபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த கிராம மக்கள் துரைராஜின் மனைவிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த அறையில் துரைராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து மஞ்சுளா கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.