செய்திகள்
யானை

கோவை அருகே காட்டு யானை தாக்கி கணவன் - மனைவி காயம்

Published On 2021-01-27 10:04 GMT   |   Update On 2021-01-27 14:24 GMT
கோவை அருகே காட்டு யானை தாக்கி கணவன் - மனைவி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது65). இவரது மனைவி சரோஜினி(58).

இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஆன்மீக தலத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று நாமக்கல்லில் இருந்து 2 பேரும் பஸ் மூலம் கோவைக்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து ஆலாந்துறை பகுதியில் உள்ள ஆன்மீக தலத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றி பார்த்து விட்டு மாலையில் ஊருக்கு திரும்புவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.

அப்போது பஸ் நிறுத்தத்தின் பின்னால் இருந்து திடீரென யானை ஒன்று வந்தது. யானையின் சத்தம் கேட்டதும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓட முயற்சித்தனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் யானை அவர்கள் 2 பேரையும் தாக்கியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தனர்.

இதை அந்த பகுதி மக்கள் பார்த்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். பின்னர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து யானையை விரட்டினர். பின்னர் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு அவர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News