சங்கரன்கோவிலில் தண்ணீர் நிரம்பிய வாளியில் மூழ்கி 2½ வயது சிறுவன் பலி
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் 2-ம் தெருவை சேர்ந்தவர் ஜெபஸ்டியான் (வயது 31). இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ஆரோன்தாஸ்(2½) என்ற சிறுவன் உள்பட 3 குழந்தைகளும் உள்ளனர். கற்பகம் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல நேற்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். மதியம் உணவு இடைவேளை நேரத்தின் போது வீட்டில் வந்து பார்த்தனர். அப்போது ஆரோன்தாசை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கு உள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர்.
வீட்டின் உள்ளே வந்து பார்த்தபோது பாதி தண்ணீர் நிரம்பிய வாளியில் ஆரோன்தாஸ் தலைகீழாக உள்ளே கிடந்தான். உடனே சிறுவனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.