செய்திகள்
ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி, வயலில் கவிழ்ந்தது- பயிா்கள் நாசம்
திருவாரூர் அருகே ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி, வயலில் கவிழ்ந்தது. இதனால் பயிர்கள் நாசமடைந்தன.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி கரும் பியூர் மெயின் ரோட்டில் சாலை அமைப்பதற்காக கரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு லாரி கரும்பியூருக்கு வந்தது . அப்போது சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் சாலையின் ஓரத்தில் லாரியின் பாரம் தாங்காமல் ரோடுஉடைந்து சாலைஅருகில் இருந்த வயலில் லாரி கவிழ்ந்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமடைந்தன. தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கிரேன் கொண்டு வரப்பட்டு வயலில் கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது.
வயலில் லாரி கவிழ்ந்து பயிர்கள் நாசமடைந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வயலில் லாரி கவிழ்ந்த போது லாரியில் யாருமில்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.