செய்திகள்
நிவாரணம் வழங்க கோரி ஆத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்
மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்ததால், உரிய நிவாரணம் வழங்க கோரி ஆத்தூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்தூர்:
ஆத்தூர், தலைவாசல், நங்கவள்ளி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 1000 பேர் நேற்று காலை ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் வெங்காயம், தக்காளி உள்பட காய்கறிகள் மற்றும் பருத்தி, சோளம் போன்ற உயர் ரக வீரிய பயிர்களை பயிர் செய்ததாகவும், சமீபத்தில் பெய்த மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்ததால், உரிய நிவாரணம் வழங்க கோரி மனு கொடுக்க வந்தனர்
அப்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் விவசாயிகளின் மனுவை பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஆத்தூர்- சேலம் மெயின் ரோட்டில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மனுவை பெற மறுத்ததை கண்டித்தும், நிவாரணம் வழங்க கோரியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், உமாசங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து உதவி கலெக்டர் துரையிடம் நிவாரணம் வழங்க கோரி மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் போராட்டத்தால் ஆத்தூர்-சேலம் ரோட்டில் மதியம் 1.45 மணி முதல் 2.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.