செய்திகள்
சேலம் அருகே சாலையோர வியாபாரி மர்ம மரணம்
சேலம் அருகே சாலையோர வியாபாரி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44). சாலையோரத்தில் கண் கண்ணாடிகள் வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இரவு நேரங்களில் அங்குள்ள கடைகள் முன்பு படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் வலசையூர் பகுதியில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.