செய்திகள்
சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு: சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
சேலம் அருகே சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் தாதம்பட்டி செல்வம் நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான 6 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை காந்திநகர் பகுதி மக்களுக்கு சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அரசு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு ஒதுக்கிய நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கட்டிடம் கட்டுவதற்கு சுற்றுச்சுவர் கட்ட முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் சுற்றுச் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ள இடத்தினை இருதரப்பினர் தங்களுக்கு சொந்தம் என்று கூறி வருகிறார்கள். இதனால் நாளை (புதன்கிழமை) சர்வேயர் வரவழைத்து இடத்தை அளவீடு செய்த பிறகு சுற்றுச்சுவர் கட்டலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.