செய்திகள்
திரவியம்

காதல் தோல்வி- மயக்க ஊசி செலுத்தி வாலிபர் தற்கொலை

Published On 2021-01-26 08:14 GMT   |   Update On 2021-01-26 08:14 GMT
காதல் தோல்வியால் மயக்க ஊசி செலுத்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணம்பட்டி:

கோவை அருகே காதல் தோல்வியால் மயக்க ஊசி செலுத்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் குமரன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் திரவியம் (வயது 27) என்பவர் செவிலியராக பணியாற்றி வந்தார். இதற்காக அந்த பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இவருக்கு அதே மருத்துமனையில் பணிபுரியும் பெண் செவிலியர் ஒருவர் மீது காதல் ஏற்பட்டது. இதையடுத்து திரவியம், அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் திரவியம், அந்த பெண்ணை சந்தித்து பேச முயன்றார். ஆனால் அவர் பேச மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த திரவியம், மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை எடுத்து வந்து, தான் தங்கியிருக்கும் அறையில் வைத்து ஊசியின் மூலம் உடலில் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த அவருடன் பணியாற்றும் செவிலியர்கள் அவரை மீட்டு, குமரன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோவில்பாளையம் போலீசாருக்கும், திரவியத்தின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் திரவியத்தின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து மகனை பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் மயக்க ஊசி செலுத்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News