செய்திகள்
தற்கொலை

முக்கூடல் அருகே குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்ததால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-26 07:42 GMT   |   Update On 2021-01-26 07:42 GMT
முக்கூடல் அருகே குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்ததால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்பை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழ பாப்பாக்குடி அம்மன் கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் ரமேஷ் (வயது 25). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி வேணி. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ரமேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த வேணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

இதற்கிடையே குடும்ப தகராறில் மனைவி தற்கொலைக்கு முயன்றதால், போலீசார் தன்னிடம் விசாரிப்பார்கள் என்று அஞ்சிய ரமேஷ் இரவில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரமேசின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கூடல் அருகே குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால், புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News