செய்திகள்
உத்தமபாளையத்தில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
உத்தமபாளையத்தில் கம்பம் சாலையில் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தில் கம்பம் சாலையின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக, உத்தமபாளையம் பஸ் நிலையம், தேரடி, பைபாஸ், கிராம சாவடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலில் சில நேரங்களில் அந்த வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசாரும் அங்கு பணியில் இருப்பது இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே உத்தமபாளையத்தில் கம்பம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.