செய்திகள்
கொள்ளை

சங்கராபுரம் அருகே ஜவுளிக்கடை பெண் அதிபரிடம் நகை பறிப்பு

Published On 2021-01-24 10:06 GMT   |   Update On 2021-01-24 10:06 GMT
சங்கராபுரம் அருகே முகத்தில் மயக்கப்பொடி தூவி ஜவுளிக்கடை பெண் அதிபரிடம் நகை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் உமையன் பாலன். இவரது மனைவி பிலவின்ராணி (வயது 35). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று பிலவின்ராணி ஜவுளிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கடை முன்பு காரில் மர்ம நபர் ஒருவர் வந்து இறங்கினார்.

பின்னர் அந்த நபர் ஜவுளிக்கடைக்குள் சென்று பிலவின்ராணியிடம் துணி வாங்குவது போல் பேச்சு கொடுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் மயக்கப் பொடியை பிலவின்ராணி மீது தூவினார். இதில் அவர் மயக்கம் அடைந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர் பிலவின்ராணி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு காரில் மாயமாகி விட்டார்.

மயக்கம் தெளிந்து எழுந்த பிலவின்ராணி தனது கழுத்தில் கிடந்த நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News