கத்தி முனையில் வழிப்பறி: கொள்ளையடித்த பணத்தை பங்கு போட்டு போதையில் மிதந்த கொள்ளையர்கள் 2 பேர் கைது
சென்னை:
கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் அழகேஸ்வரன், அனீஸ், சந்தீப் ஆகிய 3 பேரும் தங்கி இருந்து ஓட்டல் மேனேஜ்மெண்ட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்களான 3 பேரையும் கோடம்பாக்கம் பாலத்துக்கு கீழே அழைத்துச் சென்ற மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டினர்.
இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழிப்பறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.
கல்லூரி மாணவர்களிடம் ஏ.டி.எம்.கார்டை மிரட்டி வாங்கி கொள்ளையர்கள் ரூ.20 ஆயிரம் பணத்தை ஏ.டி.எம்.மில் இருந்து எடுத்துச் சென்றிருந்தனர். 2 செல்போன்களையும் பறித்துவிட்டு தப்பி இருந்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் முதலில் 6 பேர் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. தற்போது 4 பேர் சேர்ந்து வழிப்பறி செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த நரேஷ், ஸ்டீபன் இருவரும் சிக்கினர். கொள்ளையடித்த பணம் ரூ.20 ஆயிரத்தை ஆளுக்கு ரூ.5 ஆயிரமாக பிரித்து எடுத்துக் கொண்டதாக கைதானவர்கள் கூறியுள்ளனர்.
அந்த பணத்தை வைத்து மது குடித்து உல்லாசமாக செலவழித்துள்ளனர். இதனால் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தை போலீசாரால் பறிமுதல் செய்ய முடியவில்லை. கொள்ளையடித்த செல்போன்களில் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.