முத்துப்பேட்டை அருகே வேன் மின்கம்பத்தில் மோதி 15 பேர் படுகாயம்
முத்துப்பேட்டை:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள களவன்திட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40). இவர் தனது குடும்பத்தினருடன் குழந்தைகள் உள்பட 15 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு நேற்று ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த எட்வின் செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இரவு அங்கு தங்கிவிட்டு இன்று காலை மீண்டும் மார்த்தாண்டத்துக்கு திரும்பினர்.
வேன் இன்று காலை 10.30 மணிக்கு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு வாகனத்துக்கு வழி விடுவதற்காக டிரைவர் எட்வின் செல்வராஜ் வேனை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் வேன் மோதி நின்றது.
இதில் வேனில் இருந்த 15 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.